இறைவனை பிரார்த்திப்பது நமது மனித இனத்திற்கே கிடைத்த பெரும் பேறு. அந்தப் பேறு கிட்டி இருப்பினும், அவனை என்ன கேட்பது? ஒரு வரம் கேட்பின், அவன் வேறெதையும் எதிர்பார்ப்போனோ? துன்பம் நேருங்கால் அதைத் துடைக்குமாறு கிடைக்கலாம். நல்ல பண்பு பெற்று நல்வாழ்வு வாழும்போது, நாதன் அருள் இருந்து, நற்செயல்களேயே செய்யும் போது, வேறெந்த துன்பமும் அண்டாதபோது வேறென்ன கேட்கலாம்? நம் அருகில் இருப்பவர்கள் நலமுடன் வாழ வேண்டலாம். ஏன் இந்த உலகமே நலமாக வாழப் பிரார்த்தனை செய்யலாம்.
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் வரிகளில்:
உலகமெலாம் பருவ மழை ஒத்தபடி பெய்யட்டும்
உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்
பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்
கல்லாமை கடன் வறுமை களங்கங்கள் மறையட்டும்
நலவாழ்வை அளிக்கும் மெய் ஞான ஒளி வீசட்டும்
நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
இங்கே ஒருவர் சபரி ஐயப்பனை என்ன வரம் கேட்கிறார் பாருங்கள்:
எடுப்பு
என்ன வரம் கேட்பேன் நானே
என் மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே,
என்ன வரம் கேட்பேன் நானே?
புகழை நான் வேண்டவா, பொருளை நான் வேண்டவா,
நல்ல பண்பை நான் வேண்டவா,
இவை யாவும் கலந்த நீ ஈசன் மகனல்லவா!
என்ன வரம், வேறென்ன கேட்பேன் நானே,
மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே…!
தொடுப்பு
வானத்தில் நானிருந்தால் மேகமாக ஆகணும்
சபரிமலை மேல் தவழ்ந்து மழையாகப் பொழியணும்
கடலுக்குள் நான் பிறந்தால் முத்துக்கள் சேர்க்கணும்
முத்துக்கள் கோர்த்து வந்து ஐயனுக்கு சூட்டணும்,
மனிதனாகப் பிறந்து விட்டேன், எப்படி நான் வாழணும்?
இசை என்னும் மந்திரக்கோலால் மதங்களை நான் சேர்க்கணும்.
மதங்கள் எனும் மலைகள், ஆதி எனும் தடைகள் கடந்திட
ஐயன் உன் அருளினை நான் பெறணும்.
(என்ன வரம், வேறென்ன வரம் …)
முடிப்பு
பறவையாக நான் பிறந்தால், கருடனாக ஆகணும்
திருவாபரணப்பெட்டி மேலே காவலுக்குப் போகணும்
மலராக நான் பிறந்தால், கமலமாகப் பூக்கணும்
ஐயன் பாதகமலம் சேர்ந்து சரணாகதி வேண்டணும்
காற்று மண்டலத்தில் எங்கும் உன் புகழைப் பாடணும்
பேரசை என்றபோதும் ஐயன் இதை நிறைவேற்றணும்:
மரணம் வரும் தருணம் வரையில் இசைப்பயணம்
தொடர்ந்திட அடியவன் நின் திருவடி சரணமே!
(என்ன வரம், வேறென்ன வரம் …)
| என்ன வரம் கேட்பேன் நானே? |
சாமியே சரணம் ஐயப்பா!
இன்னொரு விஷயம்:
சென்ற ஏப்ரல் மாதத்தில், ஒக்கேனக்கல் பிரச்சனை சூடாகி, விஷமிகளின் வன்மச் செயலால் நம் மனம் புண்பட்டபோது, ஜேசுதாஸ் அவர்களுக்கு பங்களூர் ராம் சேவா மண்டலியில் கச்சேரி. கச்சேரியில் கன்னடர்களுக்கு மிகவும் விருப்பமான கிருஷ்ணா நீ பேகனே பாரோ பாடலைப் பாடி முடித்த கையோடு, அவர்களுக்கு நல்லதொரு அறிவுரையும் வழங்கினாரே பார்க்கலாம்! நீங்களே கேளுங்கள்:
| ஜேசுதாஸ்-அறிவுரை |
இசை இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது ஜேசுதாஸ், enna varam, Jesudas, Yesudas | மறுமொழி இல்லை »