கண்ணனைப் பாடுவதென்றாலே, எப்போதுமே சொல்லிலடங்கா சுகம். கண்ணன் உருவம் என்றதுமே, நமக்கு பற்பலத் தோன்றும். ஒன்றா, இரண்டா, நொடியில் சொல்லி முடிக்க. ஓராயிரம் வேண்டுமே!. எதைச்சொல்ல, எதை விட!
காற்பாத விரலை வாயிலே சுவைக்கும் ஆலிலைக் கண்ணன் முதல், பார்த்தசாரதியாய், கர்மயோகம் உரைக்கும் கண்ணன் வரை, அவன் புரிந்த விந்தைகள்தான் எத்தனை, எத்தனை!. அவ்விந்தைகளில் மயங்கி, அவன் நினைவன்றி வேறொன்றும் அறியா கோபியர் போல், அவன் நினைவில் திளைத்திடும் சாதகம் போல் வேறொன்றோ, சொல் மனமே!.
இங்கே, பாபநாசம் சிவன் அவர்கள், மிக எளிதாக, கண்ணனைப் பாடுகிறார் பாருங்கள். கண்ணன் பாடலுக்கு, கர்ணரஞ்சனி இராகம்!
இராகம் : கர்ணரஞ்சனி
இயற்றியவர்: பாநாசம் சிவன்
எடுப்பு
தீன சரண்யனே, தேவகி பாலனே,
திருவருள் புரிவானே!
தொடுப்பு
கானவிலோலனே, கௌஸ்துப மாலனே,
கனகாம்பரதர வனமாலாதரனே,
முடிப்பு
சியாமள ரூபனே, சரசிஜ நேத்ரனே,
சகலபுவன பரிபாலனே சீலனே,
மாமணி வண்ணனே, மரகதக் கண்ணனே
மங்கையர் மனங்கவர் மாயனே, ஆயனே,
(தீன சரண்யனே, தேவகி பாலனே,
திருவருள் புரிவானே.)
இப்பாடலை திருமதி. பாம்பே ஜெயஸ்ரீ பாடிட இங்கு கேட்கலாம்.
பாட்டுக்கு கே.ஆர்.எஸ் அவர்கள் கொடுத்த விளக்கம்:
தீன சரண்யன் = துன்புறுவோர்க்கு அடைக்கலம் கொடுப்பவன்
அவன் பக்த சரண்யன் மட்டும் இல்லை! தீன சரண்யன்!
அவர்கள் பக்தர்களா என்று பார்த்து விட்டு சரணம் அளிப்பதில்லை! தீனர்கள்-கஷ்டப்படுகிறார்கள் என்ற பார்த்த மாத்திரத்திலேயே சரண்யம்-அடைக்கலம் அளிப்பவன்! அதனால் தான் சர்வ லோக சரண்யன் என்று பெயர்!
தேவகி பாலன்:
தேவகி பாலன் என்றால் தேவகி பையன்! தேவகி புத்திரன் என்று சொல்லாமல் பாலன் என்று சொல்கிறார்! நேரடியாக வளராத பையன்! சிவபாலர்களும் குழந்தை முதல் நேரடியாக வளராமல், வளர்ந்து சேர்ந்தவர்கள் தான்!
கான விலோலன் = கான-வி-லோலன்
கானங்களிலேயே களித்து இருப்பவன்!
ஸ்தீரி லோலன் என்பது போல கான லோலன்! வி என்பது Conjunction
கெளஸ்துப மாலன் = கெளஸ்துபம் என்னும் மணியை அணிந்திருப்பவன்!
கெள+ஸ்துப = இறை+மங்கல ஒலி! நல்ல ஒலி எழுப்பும் சிவப்புக் கல் மணி கெளஸ்துபம்; திருப்பாற்கடலில் அமுது கடையும் போது தோன்றியது!
கனகாம்பரதர = கனக+அம்பர+தார
பொன்+ஆடையை+தரிப்பவன்
அம்பரமே, தண்ணீரே, சோறே அறம் செய்யும் என்று ஆண்டாள் பாடுகிறாள்! துணி+நீர்+அன்ன தானம் செய்கிறானாம் நந்தகோபன்.
வனமாலாதரனே=வன+மால+தர
வைஜயந்தி என்னும் வன மாலையைத் தரிப்பவன்! காட்டுப் பூக்களால் ஆன வனமாலை!
சியாமள ரூபனே = இரவின் நிறத்தில் ஜொலிப்பவனே (கருப்பு, கருநீலம்)!
யாமம், சியாமம் என்று அடிச் சொற்கள்!
சரசிஜ நேத்ரனே = தாமரைக் கண்ணா!
சகல புவன பரிபாலனே = அனைத்து உலகங்களையும் பரிபாலிப்பவனே!
பாலித்தல்=காத்தல்
பரி-பாலி=முழுமையாகக் காத்தல், தடைகளை விலக்கி விலக்கிக் காத்தல்!
பாஹி ஹரே என்னாது, பரி-பாஹி ஹரே என்கிறார் சுப்ரபாதத்த்தில்!
பரயா கிருபயா பரி பாஹி ஹரே!