ஜனவரி 11, 2009...12:47 காலை

இயல் இசையில் – திருப்புகழ்

மறுமொழிகளுக்குச் செல்க

இராகம் : ஹூசைனி
தலம் : திருச்செந்தூர்

தன தனன தனன தந்தத் தனதான

இயல் இசையில் உசித வஞ்சிக் கயர்வாகி

இரவுபகல் மனது சிந்தித் துழலாதே

உயர்கருணை புரியும் இன்பக் கடல்மூழ்கி

உனை எனதுள் அறியும் அன்பைத் தருவாயே

மயில் தகர்கலிடையர் அந்தத் தினைக் காவல்

வனஜகுற மகளை வந்தித் தணைவோனே

கயிலை மலை யனைய செந்திற் பதிவாழ்வே
கரிமுகவன் இளைய கந்தப் பெருமாளே.


———————————–
தகர் : ஆடு – முருகனின் மூன்று (மயில், ஆடு, யானை) வாகனங்களுள் ஒன்று; மூன்றையும் வாகனங்களாக கொண்டதற்கு பொருள் மூன்று மலங்களையும் (ஆணவம், மாயை, கன்மம்) அடக்கி ஆளுதலைக் குறித்தலாம்.
வனஜ : தாமரை/திருமகள் (வனஜம் – தாமரை ; தாமரையில் வீற்றிருப்பவள் திருமகள்- ஆகுபெயர்) (பூவெனப் படுவது பொறிவாழ் பூவே)
—————————

(பிற்சேர்க்கை : இங்கு ஜேசுதாஸ் பாடுவது, ஹிந்தோளம் போல இருக்கிறது)

இந்தச் சுட்டியில் இருந்து உங்கள் கணிணிக்கு இறக்கிக் கொள்ளலாம்:

—————————

அருணகிரியார் சொல்கிறார்:
யலிசையில் சிறந்து விளங்கும் பெண்டிரின் நினைவில், இரவு பகலெல்லாம், வேறொரு நினைவும் இல்லாமல் அலைந்தேனே. அப்படிப்பட்ட எனக்கும், நீயும் கருணை புரிந்தாயே கந்தா. உன் கருணைக்கு நிலையான பாத்திரமாக நான் என் செய்வேன்?. அந்த நிலையான, உண்மையான, பேரின்பம் தரும் கருணைக்கடலில், நான் மூழ்கிடுவேன். அவ்வாறு மூழ்கிடுகையில், அப்பா முருகா, உன்னை, எந்தன் இதயத்தில், அறியும் அன்பைத் தருவாயே.
அன்பு, அன்பு – என்பார் எல்லோரும். இறையை அறிய அன்பு இருக்க வேண்டுமாம். இதயம் முழுதும் நிரம்பி வழியும் அன்பு வேண்டுமாம். முருகைய்யா, அந்த அன்பினை நீயே எனக்குத் தருவாய். உன்னை அறியும் அன்பை, எனக்கு நீயே தருவாய். அதற்காக, உன் நினைவிலே மூழ்குகிறேன். உன்னைப் பாடுகிறேன். நீயன்றி வேறொன்றும் அறியா நிலையில், உன் கருணை என்னும் சாகரத்தில் மூழ்குகிறேன்.
யில்களும், ஆடுகளும் நிறை மலைப்புறத்தில் தினைகள் விளையும் வேடர் நிலைத்தினை காவல் காக்கும், குறத்தி மகளாம் வள்ளி, இலக்குமிபோலவே அழகாக இருக்கிறாள். தாயைப்போலவே பிள்ளை! அவளுக்கு வணக்கம் செலுத்தி (கொடியிடையாள் வள்ளி – கொடிபோல் சுற்றிக் கொண்டிருக்கக் கூடிய வள்ளி எனும் குண்டலினி), அவளை உன்பால் அணைத்தவனே (மூலாதாரத்தில் இருந்து மேலெழுப்பி, உன் நிலைக்கு உயர்த்தியவனே)
கயிலைமலைபோல் புகழ்பெற்று நிற்கும் புனித செந்தில் மாநகர் வாழ் பதியே, வேலா,
கரிமுகத்தான் கணபதிக்கு இளையவனே, கந்தப் பெருமானே.

மறுமொழி இடுக