என்னவோ போங்க, இவரை இப்படியெல்லாம் சொல்லறாங்க, யாரு இவரு? கிரிதாரியாமே, பெரிய உபகாரியாமே, அப்புறம் சக்ரதாரியமே, அப்படிப்படவரு யாருங்க?
கிராமத்து அதிகாரி சரி, அது என்ன கிரிதாரி? கிரின்னா மலையாமே. மலைக்கு அதிகாரியா?, அல்லது மலையை தூக்கியவரா? ஓ, தன் சுண்டு விரலில், கோவர்த்தன மலையைத் தூக்கி நிறுத்தி, அங்கே இருக்கிற கிராமம், குளிர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படாம, மலையையே குடையா பிடிச்சவாரா! ஓகோ!
அப்புறம் என்ன சொல்லறாங்க, உபகாரி?, பெரிய உபகாரம் செஞ்சவராமே – அப்படி என்ன செஞ்சாரு? ஓ, கதறி அழைத்த பெண்ணின் மானத்தைக் காத்தவராமே. ஆமாங்க அது பெரிய உபகாரம் தான்.
இன்னமும் சொல்லறாங்க என்னவோ, சக்ரதாரி என்று. சக்கரம் கொண்டவரு என்ன செஞ்சாரு?. பிளிரு கேட்டபோது, பதறிப்போய் காப்பதினாராமே. அது என்ன பிளிறு, ஓ அதுவா, இந்த யானைகள் கத்துமே, அந்த சப்தம் தானே பிளிறு.
அட, களிறுனா யானை இல்லையா. களிறு – அதன் சப்தம் – பிளிறு : என்ன சொற்பொருத்தம்!.
அட, ஆமாம், அன்று, முதலை தன் காலைப் பிடித்து தண்ணீருக்குள் இழுத்தபோது, அக்களிறின் பிளிரிடும் சப்தம் கேட்டு ஓடி வந்து, தன் சக்கரம் விட்டு, அந்தக் களிறைக் காப்பாற்றினாராமே!
இப்பேர்பட்டவரு, யாருங்க, கொஞ்சம் படம் போட்டுக் காட்டுங்களேன்?
குளிர் மழை காக்க குடை பிடித்த கிரிதாரி:

துளிரிடை திரௌபதி துகில் மீட்டிய உபகாரி:

பிளிறு கேட்டோடி களிறு மீட்ட சக்ரதாரி:

ஓ, அப்படியா, இவரு கிட்ட நாம என்ன கேட்கலாம்?,
வளர்த்தென்னை இங்கு பரிபாலி. என்னை உன்பால் மிகுந்த அன்பு காட்டுமாறு வளர்த்து விடு.
உன் நாமம் அதைப்பாடி, நற்கதி பெறும் வழிகாட்டு.
களிறு மீட்டதுபோல், களபம் என் அறியாமை போக்கிடு.
துகில் மீட்டியதுபோல், என் அறிவினை மீட்டிடு.
கூக்குரல் கேட்டிட, வந்து காத்திடு.
குடை பிடித்த கிரிதாரி, துகில் மீட்டிய உபகாரி, களிறு மீட்ட சக்ரதாரி என்னை இங்கு பரிபாலி!. நம்ம தமிழ் மறை என்ன சொல்லுது பார்ப்போமா:
குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை,
ஒன்று மேதொழ நம்வினை ஓயுமே.
- நம்மாழ்வார், நாலாயிர திவ்ய பிரபந்தம் (3042)
…
எண்ணிலா வூழி யூழி
தவஞ்செய்தார் வெள்கி நிற்ப,
விண்ணுளார் வியப்ப வந்து
ஆனைக்கன் றருளை யீந்த
கண்ணறா, உன்னை யென்னோ
களைகணாக் கருது மாறே.
- தொண்டரடிப்பொடியாழ்வார், நாலாயிர திவ்ய பிரபந்தம் (915)
ஆமாங்க, நீந்திக் கடக்க முடியாத, பிறவிக் கடலைக் கடக்க இவர் உதவியை நாடினால், கடக்க முடியுமாமே.
அலோ, சாரு,
கிரிதாரி – உபகாரி – சக்ரதாரி,
நேரா வந்து இங்கே என்ன பரிபாலிக்கணுமுங்க!
விருத்தம்
இராகங்கள் : ஷண்முகப்ரியா, வலஜி, கானடா
குளிர் மழை காக்க குடை பிடித்த கிரிதாரி,
துளிரிடை திரௌபதி துகில் மீட்டிய உபகாரி,
பிளிறு கேட்டோடி களிறு மீட்ட சக்ரதாரி,
கிரிதாரி – உபகாரி – சக்ரதாரி,
வளர்த்தென்னை இங்கு பரிபாலி.
| குளிர் மழை காக்க … |

அருமை..
அன்பரே
பாராட்டுகள் செய்திகளுக்கு,
ஆயினும் உங்களுடைய மொழி “என்னவோ போங்க, இவரை இப்படியெல்லாம் சொல்லறாங்க” என்றிருப்பது சிறப்பாக இல்லை. அது தமிழ்மொழிக்குக் கெடுதல்.
எழுதுபவர்களுக்கும் சிறப்பில்லை. அப்படிமொழியை எழுதுவது திவ்வியப்பிரபந்தத்தை அழிக்க வழிசெய்யும். சிதைவாகத் தமிழ்மொழியை எழுதவும் நூல்களில் பாடாமலும் இருப்பதால்தான் இன்னும் 1400 ஆண்டுகள் ஆகியும் ஆழ்வார் பாடல்கள் புரிகின்றன.
எனவே நீங்கள் ஆழ்வார் சொற்களுக்கு என்ன எதிர்காலம் வேண்டுமோ அதை நினைந்து உங்களுடைய மொழியையும் மாற்ற முடிவுசெய்துகொள்ளுங்கள்.
பிரபந்தம் பற்றி இப்படித் தெரிந்த உங்களுக்குப் பெரிதாகச் சொல்லவேண்டியதில்லை.
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய ஆழ்வாரின் சங்கத் தமிழ்!
வாங்க சந்திரசேகரனார்!
துவக்கம் தான் “என்னவோ போங்க…” என்று இருக்குமே தவிர, படிக்கப் படிக்க “என்னோவோ என்று இருந்து விட்டோமே” என்று நினைக்கச் செய்யத் தூண்டுவதே இந்நடையின் நோக்கம்.
மற்றபடி தாங்கள் சொல்லுவது போன்றதொரு கருத்தினைத் தருவதாக நான் நினைக்கவில்லை.
தங்களது முகவரியினைப் பார்த்தால் – தாங்கள் பெரியண்ணன் சந்திரசேகரன் என நினைக்கிறேன். இதர இடுகைகளையும் படித்துப் பார்த்துச் சொல்ல வேண்டும் – இவை தமிழ் மொழிக்கு பாதகம் செய்கிறதா என்று!
வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள்!