இந்த இடுகையில் நாம் பார்க்கப்போகிற பாடலில் ஆசிரியர் மிகவும் இசைப்புலமை வாய்ந்தவர். 72 மேளகர்த்தா இராகங்களிலும் இவர் பாடல்கள் இயற்றியிருக்கிறார் என்பதே இவரது இசைப்புலமையை பறை சாற்றும். நீதிமதி இராகத்தில் இவர் இயற்றிய ‘மோகன கர முத்துக்குமரா’ பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடல். முருகன் மீதும், மயிலை கற்பகாம்பாள் மீதும் இவருக்கு அளவு கடந்த பக்தி. அவர்கள் மீது எண்ணற்ற பாடல்களை இயற்றியுள்ளார்.

இப்படிப்பட்ட பெருமைகளைக் கொண்ட இவர் யார்? கோடீஸ்வர ஐயர் (1870-1936), என்பது இவரது பெயர்.
“கவி குஞ்சர பாரதி” என்றொரு பெரும் புலமை வாய்ந்த கவியின் பேரன். “கவிகுஞ்சரதாசன்” என்று தன் தாத்தாவின் பெயரோடு ‘தாசன்’ என சேர்த்துக் கொண்டார், இவரது சாகித்ய முத்திரைகளில்.
இவரது படைப்புகளின் பட்டியலைப் பார்த்தாலே பிரம்மிப்பாக இருக்கிறது:
* சித்தி விநாயகர் பதிகம்
* சண்முக மாலை
* சுந்தரேஸ்வர பதிகம்
* கயற்கண்ணி பதிற்றுப்பத்து
* மீனாட்சி அந்தாதி
இங்கு பார்க்கப்போகிற பாடலின் இராகம் இரசிகப்பிரியா. 72 மேளகர்த்தா இராகங்களில் கடைசி இராகமாகிய இந்த இராகம், மிகவும் சுவையானது. இது, விறுவிறுப்பான பாடல்களை அமைப்பதற்கு ஏற்ற இராகம். முன்பொருமுறை திரு.சிமுலேஷன் அவர்கள் இந்த இராகத்தைப்பற்றி எழுதி இருந்தார். இதோ அதன் சுட்டி. இரசிகப்பிரியாவில் எனக்குப் பிடித்த இன்னொரு பாடல் சித்ரவீணை இரவிகிரண் அவர்கள் இயற்றிய ‘இரசிகப்பிரிய, இராக இரசிகப்பிரியே!. அந்தப்பாடலை இங்கு கேட்கலாம். அந்தப் பாடல் போலவே, இந்த இடுகையில் நாம் பார்க்கப்போகும் இந்தப் பாடல் வரியிலும் இராகத்தின் பெயரும் இடம்பெற்று இருப்பது, தற்செயலோ, தவச்செயலோ!
இராகம்: இரசிகப்பிரியா
(72வது மேளம்)
இயற்றியவர் : கோடீஸ்வர ஐயர்
பாடுபவர் : டி.எம்.கிருஷ்ணா
எடுப்பு
அருள் செய்ய வேண்டும் அய்யா – அரசே முருகய்யா
அருள் செய்ய வேண்டும் அய்யா!
தொடுப்பு
மருளுரவே என்னை மயக்கிடும்
மாய வல் இருள் அறவே ஞான
சூரியன் என வந்தோர் சொல்
அருள் செய்ய வேண்டும் அய்யா!
முடிப்பு
நிலையா காயம் இலையே இதனை
நிலையென்று எண்ணுவதென்ன மாயம்?
நிலையென்று உனையே
நினைந்து நான் உய்ய
நேச கவி குஞ்சரதாச ரசிகப்பிரியா
அருள் செய்ய வேண்டும் அய்யா!
| arulseyya_vEndum_i… |
பாடலைக் கேட்டீர்களா, எப்படி விறுவிறுப்பாக அமைந்துள்ளதல்லவா!. பாடல் வரிகளில் நான் வியந்தது என்னவென்றால், பல சொற்கள், மிகச்சிரிய சொற்கள் – மருள் உர, இருள் அற, மாய, வல், ஞான, நேச, கவி என இப்படியாக!
விறுவிறுப்பில், அருணகிரியாரை அல்லவா நினைவு படுத்துகிறது!
இவ்வளவு எளிய பாட்டில் எவ்வளவு உயர்ந்த தத்துவமும் அடங்கி இருக்கு! இப்பாடலில், முருகனின் அழகைப்பற்றிப் பாடவில்லை. அவன் அணிந்திருக்கும் வேல், மயில் அல்லது சேவல் பற்றிக் குறிப்பில்லை. அவன் சிவன் சுதன் என்றோ அவனே சிவனே எனவோ சொல்லவில்லை. அவன் முகுந்தன் மருகன் எனச் சொல்லவில்லை. வேறு எதைப்பற்றித்தான் இருக்கு? எதைப்பற்ற வேண்டும் என்றிருக்கு! எதைப்பற்ற வேண்டும்? நிலையானதைப் பற்ற வேண்டும். நிலையிலா உடலைப்பற்றி என்ன பயன்? மிஞ்சுவது மாயை தரும் மருள் மட்டுமே. தொடக்கமில்லா மாயை, இங்கே இப்போதே முடிவு பெற, முடிவில்லா, நிலையான, முருகனை நினைக்க, அதுவே துன்பங்களில் இருந்து மீள்வதற்கான வழி. உன்னைப் பற்றிட அருள் செய்ய வேண்டும் முருகய்யா!
ஓவியரும் இசைக்கலைஞருமான திரு.S.ராஜம் அவர்கள் கோடீஸ்வர ஐயர் கீர்த்தனைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள் என்பது கேள்வி. இதுபோன்ற தமிழ் கீர்த்தனைகளை மக்களிடையே பரவிடச் செய்திடல் வேண்டும். இசைக் கலைஞர்களும் தங்களின் கச்சேரிகளில் நிறைய தமிழ் கீர்த்தனைகளைக் கொடுத்து, தமிழிசையை வளர்க்க வேண்டும்.
பி.கு: இந்தப் பாடலை இன்னும் சில பாடகர்கள் பாடிக் கேட்கையில், பாடல் வரிகளில் சற்றே மாற்றம் இருப்பதாகத் தெரிகிறது. நீங்களும் சற்றே மாற்றத்துடன் இந்தப் பாடலைக் கேட்டிருக்கலாம்!
உசாத்துணை:
* கர்நாடிகா.நெட்
* வித்வன்.காம்
நல்லதொரு பதிவு. அதே நேரத்தில், ரசிகப் பிரியாவில் அமைந்த திரைப்படப் பாடல்கள் எதுவும் இருந்தால், அதையும் குறிப்பிட்டால் இன்னும் சுவையாய் இருக்குமே !