இதயக்கோயிலில்…
ஏப்ரல் 27, 2008 ஆல் jeevagv
சென்ற பதிவில் என்னை மறவாமல் இருக்க வேண்டும் என தியாகராஜர் இறைவனிடம் மன்றாடுவதை பைரவி ராகக் கீர்த்தனையில் பார்த்தோம் அல்லவா?
இந்தப் பதிவில் எப்படி மறப்பேன் ஐயா என்கிற உருப்படியினைப் பார்ப்போம். அழகு தமிழில் நிறைவான பாடல்கள் பல படைத்துள்ள கடலூர் எம்.சுப்ரமணியன் அவர்கள் இந்தப் பாடலை எழுதியுள்ளார். அவரது தமிழிசைத் தொண்டு போற்றுதலுக்கு உரியது. ‘பாடலீசன்’ என்பது அவரது முத்திரை என நினைக்கிறேன். அவருடைய இன்னொரு பாடல் மிகப் பிரபலமானது - இராகமாலிகையில் அமைந்தது - நீங்களே சொல்லுங்களேன்.
இந்தப் பாடலைக் கேட்குமுன் சிறியதொரு முகவுரை: இதயக் கமலத்தில், அனஹதத்தில், தூய அன்பாக மலர்ந்திடும் முருகனை எப்படி மறக்க இயலும்? சந்தோக்ய உபநிடதம் அத்தியாயம் எட்டில் (1.3) சொல்லப்பட்டுள்ளதை இங்கே நினைவு கூறுகிறேன்: “இந்த இதயக் கமலத்தில் தான் எல்லாமும் இருக்கிறது. சொர்கமும், பூமியும் இங்கேதான் இருக்கிறது. ஆகாசமும், நெருப்பும், காற்றும், சூரியனும், சந்திரனும், சுடர் விடும் விண்மீன்களும் இங்கேதான் இருக்கின்றன.”
இப்படி எல்லாமுமாய் இருக்கும் தூய சச்சிதானந்தம், தூய அன்பில் துலங்கிடும். துலங்கித் துலங்கி துளிர் விடும். துளிர் துளிர் விட, தூர்ந்து வளரும். தூர்ந்து வளர வளர, துரியம் அதை அடைந்திட பாதை தனைக் காட்டிடும்.
இதயக் கமலத்தில் அன்பே வடிவாய், ஆனந்தப் புன்னகையுடன், அருந்தவப் புதல்வனாய், பழனியப்பனாய், அவன் அருள் வேண்டி, இந்தப் பாடலை படித்திடுவோம்:
எடுப்பு:
இதயக் கோயிலில் வசித்திடும் உன்னையே
எப்படி மறப்பேன் ஐயா? - முருகா - என்
இதயக் கோயிலில் வசித்திடும் உன்னையே
எப்படி மறப்பேன் ஐயா?
தொடுப்பு:
பதமலரை தினம் இசை என்னும் மலராலே
பாடிப் பணிந்தேனய்யா - பழனியப்பனே…
முடிப்பு:
பட்டம் பதவி என்ற புகழறியேன் - நான்
பட்டம் பதவி என்ற புகழறியேன்… கந்தக்
கோட்டமே சதமென்று நம்பி வந்தேன்
கஷ்டமே வந்தாலும்… முருகா…
கஷ்டமே வந்தாலும், கை தூக்கி விடுவாயே
கண்கண்ட தெய்வமே - பாடலீசன் குமரா…
என் இதயக் கோயிலில் வசித்திடும் உன்னையே
எப்படி மறப்பேன் ஐயா, முருகா…
———————————-
இராகம்: சூத்ரதாரி (நடபைரவி ஜன்யம்) (ஸ ரி2 ம ப த1 ஸ் - ஸ் த1 ப ம ரி2 ஸ)
தாளம்: ஆதி
இயற்றியவர்: கடலூர் எம்.சுப்ரமணியம்
பாடுபவர்: நித்யஸ்ரீ மஹாதேவன்
| Idhayak Koyilil-re… |
| Hosted by eSnips |