ராகம் : சிவரஞ்சனி
தமிழிசை பாடுகின்ற வானம்பாடி – என்
தலைவன் முருகனை தினம் தேடி – நான்
தமிழிசை பாடுகின்ற வானம்பாடி!
அமிழ்தினும் இனிதான தமிழ்ப்பாட்டு – அந்த
ஆறுமுகம் மயங்கும் அதைக்கேட்டு – செந்
தமிழிசை பாடுகின்ற வானம்பாடி! – என்
தலைவன் முருகனை தினம் தேடி!
திருப்புகழில் மணக்கும் தமிழிசையே – தேன்
திருவாசம் தன்னில் தமிழிசையே!
திருஅருட்பாவெல்லாம் தமிழிசையே – தமிழ்
தெய்வத்தை வசமாக்கும் தமிழிசையே!
(தமிழிசை…)
பூம்பாவைக்கு உயிரைத் தந்த இசை – பொங்கும்
புனலினையே எதிர்த்து வந்த இசை!
பாம்பு தன் நஞ்செடுக்க வைத்த இசை – என்றும்
பரவசம் ஊட்டுகின்ற இன்ப இசை!
(தமிழிசை…)
கடைசி நான்கு வரிகளுக்கு விளக்கம் சொல்ல வாரீகளா வாசகர்களே?
பத்மஸ்ரீ Dr. சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கம்பீரக் குரலில் இந்த பாடலைக்கேட்டு தமிழிசையில் திளைத்தபடியே, கொஞ்சம் பொருள் சொல்லுங்களேன்…!
| 08_SEERKAZHI_Thami… |
பாடலை மேலே கேட்க இயலாதவர்களுக்காக சுட்டி இங்கே.
இதுபோன்ற உருக்கமான பாடல்களுக்கு ஏற்ற ராகம் சிவரஞ்சனி. இந்த ராகத்தில் அமைந்த சில திரை இசைப்பாடல்கள்:
இன்னிசை பாடி வரும் காற்றுக்கு (துள்ளாத மனமும் துள்ளும்)
உன்னைத்தானே தஞ்சம் என்று (நல்லவனுக்கு நல்லவன்)
ஒரு ஜீவன் தான் (நான் அடிமை இல்லை)
வா வா அன்பே பூஜை செய்து (அக்னி நட்சத்திரம்)
நான் பாடும் மௌன ராகம் (இதயக்கோவில்)
ஆகா….அருமையான பாடல். தமிழிசை பாடும் வானம்பாடி என்ற தலைப்பைப் பார்த்ததுமே என்ன பாடலென்று தெரிந்து விட்டது.
எனக்கும் மிகவும் பிடித்த பாடலாயிற்றே. சீர்காழியின் கணீர் குரலில் கேட்கக் கேட்கச் சுகம்.
பூம்பாவைக்கு உயிரைத் தந்த இசை – மயிலையில் மாண்ட பூம்பாவையைத் தேவாரப் பண்பாடி எழுப்பினார் திருஞானசம்பந்தர்
புனல் வாதிலே தமிழில் பண்ணெழுதிப் போட்டார் சம்பந்தர். அது முன்னேறியது. அதுதான் பொங்கும் புனலினையே எதிர்த்து நின்ற இசை.
பாம்பு தன் நஞ்செடுக்க வைத்த இசை – பாம்பு தன்னுடைய நஞ்சு என்று பொருள் கொள்ளக் கூடாது. பாம்புதன்…பாம்பினுடைய என்று பொருள். அரவம் தீண்டி அரவமற்றுப் போன அப்பூதியடிகளின் மகனை திருநாவுக்கரவர் பாடிப் பிழைக்க வைத்தார். சிவாஜி நடித்திருக்கிறாரே. திருவருட்செல்வரில். அது.
விளக்கம் போதுமா?
வாங்க ஜி.ரா,
கேட்க சுகம், அதை திருப்பி திருப்பி பதிவிடுவது அதிலும் சுகம்! மூன்றாவது முறையாக, மூன்றாவது பதிவில் இந்தப் பாடலை இடுகிறேன், இன்னமும் தெவிட்டவில்லை! இந்த முறை கிட்டியது, விளக்கம் மட்டுமல்ல, விருந்தும் தான்!
ஒரே பாடலின் ‘நால்வரில்’ பாதியும், நமச்சிவாய என பாடும் தமிழ் நாதத்தின் வரலாறும் சொல்லிவிட்டது பாடல்!
விளக்கம் போதுமென எப்படிச் சொல்ல முடியும், எவ்வளவு சொன்னாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் அல்லவா!
மிக்க நன்றி!